2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (08) முதல் ஆரம்பமாகிறது.
அந்த வகையில் இன்றைய (08.11.2025) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 06.30 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 10.30 முதல் 11.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை11.00 முதல் மாலை 06.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2026 இன் இரண்டாம் மதிப்பீட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மாலை 06.00 முதல் 06.30 வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 நாட்களுக்கு இடம்பெற்றதன் பின்னர், இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும்.
வரவு செலவுத் திட்ட காலப்பகுதியில், அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து, ஒவ்வொரு நாளும் விவாதம் நடைபெறும் என்றும் நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் மேலும் தெரிவித்தது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (07) மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/x3RcqZvjjk4
