Home இலங்கை அரசியல் தமிழரசுக்கட்சி நிர்வாகத் தெரிவுக்கு எதிரான வழக்கை முடிவுறுத்த தீர்மானம்

தமிழரசுக்கட்சி நிர்வாகத் தெரிவுக்கு எதிரான வழக்கை முடிவுறுத்த தீர்மானம்

0

தமிழரசுக்கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒரு
நிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக
பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான
எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குதெருவில்
அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (16.06) காலை இடம்பெற்றது.
அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து
தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து
தெரிவிக்கையில்,

கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வழக்கு தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது
தொடர்பான விளக்கம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. கடந்த தவணையில் எதிராளிகளாக
பெயரிடப்பட்ட ஏழு பேருடன் கிளிநொச்சியை சேர்ந்த ஜீவராஜா என்பவர் தன்னையும்
இணைத்துக் கொள்ளுமாறு விண்ணப்பம் செய்திருந்தார்.

அவரது விண்ணப்பம் தொடர்பாக ஆட்சேபனைகள் இருப்பின், அந்த ஆட்சேபனைகளை
தெரிவிப்பதற்காக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் யோகேஸ்வரன்
சார்பில் ஆயராகிய சட்டத்தரணி அவகாசம் வழங்குமாறு தவணை கேட்டிருந்தார். நானும்
அப்படி கேட்டிருக்கின்றேன்.

அதனையடுத்து எதிர்வரும் யூலை 19 ஆம் திகதிக்கு
வழக்கு அழைக்கப்படவுள்ளது.

அந்த வகையில் கடந்த தவணைக்கு முன்பாக கட்சியின் மத்திய செயற்குழு எடுத்த
தீர்மானத்திற்கமைய வழக்கை முடிவுறுத்திக் கொள்வது தொடர்பாக நீதிமன்றிலே நான்
கூறியிருக்கின்றேன்.

எதிராளிகள் முன்வைத்துள்ள ஆட்சேபனைகள் தொடர்பாக வழக்காளி
தன்னுடைய நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவே கடந்த
தவணை வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஒருமித்த நிலைப்பாடு

இதுபோன்ற சிவில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் போது அதில் பல படிமுறைகள்
உள்ளது. அவற்றை கடந்த பின்னரே வழக்கு விசாரணைக்கு நியமிக்கப்படலாம். சாதரணமாக
இவ்வாறான வழக்கில் ஒரு வருடத்திற்கு பின்னரே முதலாவது விளக்கத்திற்கான திகதி
குறிக்கப்படும்.

ஆனால் இந்த வழக்கில் வழக்கை முடிவுறுத்த வேண்டும் என்ற
நோக்கத்திற்காக நாங்கள் குறுகிய தினத்தை கேட்டிருக்கின்றோம்.

அன்றையதினம் வழக்காளி நீதிமன்றிலே தெரிவித்த விடயத்துடன், எதிராளிகள் ஏழு
பேரும் அழைத்திருக்கின்ற ஆட்சேபனைகளின் அடிப்படையில் மூன்று வித்தியாசமான
நிலைப்பாடுகள் எடுக்கப்பட்டது.

குறிப்பாக நானும் கட்சியின் பொதுச் செயலாளரும், நிர்வாக செயலாளரும் ஒரு
நிலைப்பாட்டையும், மாவை சேனாதிராஜா மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் வேறொரு
நிலைப்பாட்டையும், சிறிதரன், குகதாசன் ஆகியோர் இன்னொரு நிலைப்பாட்டையும்
எடுத்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

இதனால் கட்சி ஒரு பொதுவான
நிலைப்பாட்டை எடுக்காத சூழ்நிலையில் நாங்கள் எப்படி எமது நிலைப்பாட்டை இதற்கு
தெரியப்படுத்துவது என்று அவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இருப்பினும் கட்சி தற்போது ஒரு நிலைப்பாட்டிற்கு வந்துள்ளது. வழக்காளி கோரும்
நிவாரணங்களை வழங்கி தெரிவுகளை மீள செய்வதற்கு நான் இணங்குகின்றேன் என்று
சிறிதரன் கூறியிருந்தார்.

அதனை நீதிமன்றிலே நான் சொல்லியிருக்கின்றேன்.

இப்போது நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ள காரணத்தினால் நாங்கள் ஏழு
பேரும், எட்டாவது எதிராளியான ரத்தினவடிவேலும் இணைந்து, வழக்கிலே எமது
மறுமொழியை ஒரு நிலைப்பாடாக பதிவு செய்து வழக்கை முடிவுறுத்துவதற்காக
வழக்காளியோடு இணக்கப்பாட்டிற்கு வருகிறோம் என்று கூறி வழக்கை
முடிவுறுத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்காக வழக்காளியின் சட்டத்தரணியோடு நான் பேசியிருக்கின்றேன். ஏனையவர்களின்
சட்டத்தரணிகளுடன் பேசி பொது நிலைப்பாட்டிற்கு இணங்கிகொள்வதுடன், எதிர்வரும்
மாதம் 14 ஆம் திகதி வவுனியாவில் மத்தியகுழு மீண்டும் கூடி அந்த மறுமொழியின்
வரைபை மத்திய செயற்குழுவிற்கு சமர்ப்பித்து அதன் அங்கீகாரத்தை பெறவேண்டும்.

அதனை அடுத்த தவணையில் நீதிமன்றில் சமர்ப்பித்து அதன் பின்னர் எமது
இணக்கப்பாட்டை செய்யலாம் என்று தீர்மானித்திருக்கின்றோம் என்றார்.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற இக் இக்கூட்டத்தில்
பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ்
நிர்மலநாதன், கலையரசன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், சட்டத்தரணி
கே.வி.தவராசா உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version