லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ட்ரீம் லைனர் விமானம், மேலே பறக்க இருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக விமானம் புறப்பட்ட இடத்துக்கு கொண்டு வரப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது.
ஏர் இந்தியாவுக்கு சொந்தமான ட்ரீம் லைனர் விமானம்( ஏஐ 2017) இந்திய தலைநகர் டில்லியில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு புறப்பட்டது. ஓடுபாதையில் புறப்பட்ட அந்த விமானம் மேலே பறக்க இருந்த நிலையில், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டறிந்தனர்.
மாற்று விமானம் மூலம் லண்டன் செல்லவுள்ள பயணிகள்
இது தொடர்பாக விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், வழக்கமான நடைமுறைகளின்படி, அந்த விமானம், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில், மாற்று விமானம் மூலம் பயணிகள் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பயணிகளுக்கு தேவையான உதவிகளை ஊழியர்கள் செய்து கொடுத்து வருகின்றனர் பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பே எங்களுக்கு அதிக முக்கியத்துவம் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இடம்பெற்ற கோரவிபத்து
கடந்த ஜூன் 12ம் திகதி ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்த போயிங் 787 ட்ரீம் லைனர் விமானம் குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய சிறிது நேரத்தில் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த ஒருவரைத் தவிர 241 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் விமானம் விழுந்த இடத்தில் இருந்த 20க்கும் மேற்பட்டவர்களும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
