நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வந்த அழைப்பிதழ்கள் மற்றும் பயணச்சீட்டுகளைப்
பயன்படுத்தி நான்கு அமைச்சர்கள் பிரித்தானியாவுக்குச் சென்றமை தொடர்பில்
விசாரிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்
சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள்
விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு சிறைத் தண்டனை
அத்துடன், மேற்படி அமைச்சர்கள் நால்வரும் இந்த வெளிநாட்டுப் பயணத்தின்போது
விமானத்தில் சிக்கன வகுப்பு பயணச்சீட்டுடன் பயணித்து, விளக்குகளை அணைத்த
பின்னர் இரகசியமாக வணிக வகுப்புக்கு மாறிச் சென்று அமர்ந்து கொண்டனர் எனவும்
அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு நடந்துகொள்வது மக்கள் பணத்தைத் துஷ்பிரயோகம்
செய்வதாகும் என்றும், இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோருக்குச் சிறைத் தண்டனை
கூட கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மேற்படி அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில் முதலில் ஆராய
வேண்டும் என்றும், இந்தச் செயல் குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்
என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
