Home இலங்கை அரசியல் சம்பந்தனின் இழப்பு நிரப்ப முடியாத இடைவெளி : இம்ரான் எம்.பி அனுதாபம்

சம்பந்தனின் இழப்பு நிரப்ப முடியாத இடைவெளி : இம்ரான் எம்.பி அனுதாபம்

0

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நிறைந்த அனுபவசாலியுமான ஆர்.சம்பந்தன் ஐயாவின் இழப்பு நிரப்பு முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அனுதாப செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

காலஞ்சென்ற எனது தந்தை எம்.ஈ.எச்.மகரூப் போன்றே இவரும் 1977 இல் முதன் முதல் நாடாளுமன்றம் தெரிவானார். இவரது நாடாளுமன்ற அனுபவம் என்னுடைய வயதையும் விடவும் அதிகமாகும். நாடாளுமன்றத்தில் சட்ட ரீதியான விவாதங்களில் நிறைந்த பங்களிப்பை வழங்கியவர் இவர்.

நாடாளுமன்ற பிரவேசம்

1977 முதல் 1983 வரை நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்ட இவர் 1983 இல் இவரது கட்சித் தீர்மானத்திற்கமைய நாடாளுமன்றத்தைப் புறக்கணித்ததால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.

1997 இல் அமரர் தங்கத்துரையின் இழப்பினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அடுத்த விருப்பு வாக்கு நிலையிலிருந்த இவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.பின்னர் 2001 முதல் இறக்கும் வரை தொடர்ச்சியாக வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியைப் பெற்றதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை இவர் வழங்கி வந்தார்.

வயதான காலத்திலும் இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வில் தமிழ் மக்களது வகிபாகம், தமிழ் மக்களுக்கான சுய நிர்ணய உரிமை தொடர்பில் சர்வதேச ரீதியாக பல்வேறு தரப்பினருடனும் பேசிவந்துள்ளார்.

முஸ்லிம் மக்களுடன் அந்நியோன்னம்

முஸ்லிம் மக்களுடனும் மிகவும் அந்நியோன்யமாக நடந்துள்ளார். கடந்த காலங்களில் இவரது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகளில் பள்ளிவாயல்கள் புனரமைப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை நான் அறிவேன்.

2015 இல் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு பக்கத்துணை வழங்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான். இதில் சம்பந்தர் ஐயாவின் பங்கு அளப்பரியது.

இலங்கை அரசியல் வரலாற்றில் 2015 இல் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளார். இவரது இழப்பினால் துயருறும் இவரது குடும்பத்தினருக்கும், பொது மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   

NO COMMENTS

Exit mobile version