Home உலகம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தலைவர்!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தலைவர்!

0

ஈரான் நாட்டின் உயர் தலைவரான அயதுல்லா அலி காமேனி ( 85) உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஈரான் (Iran) நாட்டின் உயர் தலைவரான அயதுல்லா அலி காமேனியின் (Ali Khamenei) உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சில காலமாக உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் தகவல் வெளியானது.

அவருக்கு பதில் புதிய உயர் தலைவராக அவரது இரண்டாவது மகன் முஜ்தபா காமேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் பதவியேற்பார் என்றும் பேசப்பட்டது.

அலி காமேனி

ஈரானில் நடைபெற்ற ரகசிய கூட்டத்தில் நாட்டின் உயர் தலைவராக முஜ்தபா காமேனி தேர்வு செய்யப்பட்டதாக ஒய்நெட் நியூஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியை மேற்கோள் காட்டி, ஈரான் இன்டர்நேஷனல் தகவல் வெளியிட்டது.

அலி காமேனியின் உத்தரவின் பேரில் செப்டம்பர் 26-ம் திகதி ஈரான் நிபுணர்கள் சபை உறுப்பினர்களின் திடீர் கூட்டம் நடைபெற்றதாகவும் ஈரான் இன்டர்நேஷனல் குறிப்பிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து அலி காமேனி கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியானது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

அலி காமேனியின் உடல்நிலை மோசமடைந்ததால் புதிய உயர் தலைவரை தேர்வு செய்யும் பணி ரகசியமாக நடைபெற்று வருவதாக நியூயார்க் டைம்ஸ் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் நாட்டின் உயர் தலைவரின் உடல்நிலை குறித்த எதிர்மறையான தகவல்கள் ஈரானில் பரபரப்பை ஏற்படுத்தின.

ஆனால், இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தூதரை சந்தித்து பேசியபோது எடுத்த புகைப்படத்தை அலி காமேனி நேற்று தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், லெபனானில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் மூத்த தூதர் முஜ்தபா அமானியை சந்தித்து கலந்துரையாடியதாக அவர் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/iran-s-supreme-leader-succession-rumors-1731948450

NO COMMENTS

Exit mobile version