கேரளாவில் (Kerala) ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K. Stalin) நிவாரணம் அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கேரளா வயநாட்டில் (Wayanad) நேற்று (30) காலை ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் (X) தளத்தில் இட்ட பதிவொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், கேரளாவில் ஏற்பட்ட இந்த பாரிய அனர்த்தம் தொடர்பில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் (Pinarayi Vijayan) தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், இது தவிர, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவையும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழுவையும் அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நிவாரணப் பணி
பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாகவும், தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கு என கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் நிதியில் இருந்து ரூ.5 கோடி வழங்குவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பலி எண்ணிக்கை
இந்தநிலையில், தற்போதுவரை நிலச்சரிவில் சிக்குண்டு உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனாலும், பலரின் நிலை என்னவென்று தெரியாது என்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களை மீட்க உலங்கு வானூர்தி மூலம் மீட்புப்படையினர் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/kerala-landslide-stalin-announces5-cr-relief-1722366797
