Home உலகம் மாலைதீவு தேர்தல்: இந்தியாவுக்கு மற்றுமொரு பேரிடி

மாலைதீவு தேர்தல்: இந்தியாவுக்கு மற்றுமொரு பேரிடி

0

மாலைதீவில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதிபர் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி 68 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் அவரது கூட்டணி கட்சிகளும் 2 இடங்களை கைப்பற்றியுள்ளன.இது இந்திய அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

மாலைதீவு நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் மற்றும் முக்கிய எதிர் கட்சியான மாலைதீவு ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 368 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தேர்தல் முடிவுகள்

இதில், நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 90 இடங்களில் அதிபர் முய்சூவின் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் 70 இடங்களை கைப்பற்றி அருதி பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தை கைப்பற்றியுள்ளன.

மாலைதீவு அரசியல் சாசன முறைப்படி நாடாளுமன்றத்தில் எந்த கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அந்த கட்சியை சேர்ந்தவர்களே அதிபராக வர முடியும்.

தற்போது தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் இது அதிபர் முய்சூவுக்கு மேலும் அதிகாரத்தை தந்துள்ளதாக பார்க்கப்படுவதுடன் இந்த தேர்தல் அதிபர் முய்சுவின் சீன ஆதரவு கொள்கைகளுக்கான ஒரு பொது வாக்கெடுப்பாக கருதப்பட்டது.

இந்தியாவின் கவலை

மக்கள் அவருக்கு பெருமளவில் ஆதரவு தந்துள்ளமையானது இது இந்தியாவிற்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

ஏனெனில் மாலைதீவு அதிபரான முகமது முய்சு சீன ஆதரவாளராக கருதப்படுகிறார்.

மாலைதீவுக்கு மருத்துவ உதவி மற்றும் கடல் கண்காணிப்புக்காக அதிநவீன ஹெலிகொப்டர்கள் ,டார்னியர் என்ற சிறிய ரக விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்குகிறது.

அவற்றை பராமரித்து இயக்குவது உள்ளிட்ட பணிகளில் 88 இந்திய இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களை திரும்பப் பெறுமாறு அதிபர் முய்சு ஏற்கனவே இந்திய அரசிடம் வலியுறுத்தினார்.

இதனால் மாலைதீவு இந்தியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது .

தற்போது தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றுள்ளதால் மேற்கொண்டு அவர் சீனாவின் பக்கமே சாய்வார் என்ற என்ற நிலை உருவாகியுள்ளது .

சீனாவுடன் நெருக்கம்

மாலைதீவு இந்தியா உடனான உறவை கைவிட்டு சீனாவுடன் நெருக்கமாகி வருகிறது.

அண்மையில் கூட சீனாவிடம் இராணுவ உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளை பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதன் காரணமாக மாலைதீவு கடல் பகுதிக்குள் சீன கடற்படை கப்பல்கள் நுழையலாம் என்றும் இது இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

மாலைதீவு அதிபரின் ஆதரவு போக்கை பயன்படுத்தி சீனா அங்கே ஒரு இராணுவ தளத்தை நிறுவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், இந்தியாவின் கடல் பாதுகாப்பு மற்றும் முக்கியமான கடல் போக்குவரத்து பாதைகளில் சீனா பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்றும் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Source: https://ibctamil.com/article/maldives-election-2024-another-proplem-for-india-1714031792

NO COMMENTS

Exit mobile version