Home இலங்கை அரசியல் சிறிலங்கா அதிபர் தேர்தல் : ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ரணில் ஆதரவு

சிறிலங்கா அதிபர் தேர்தல் : ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு ரணில் ஆதரவு

0

2024ஆம் ஆண்டு சிறிலங்காவின் அதிபர் தேர்தலை (Presidential election) நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission) உறுப்பினர்களுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

குறித்த மனுவை சமிந்திர தயான் லெனவ (Chamindra Dayan Lenawa) என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிபர் ஊடகப் பிரிவு (PMD) இன்று (04) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்காலத் தடை உத்தரவு

மேற்படி மனுவை தாக்கல் செய்வதன் மூலம், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 12(1), 82(6), 3, 4, 118 மற்றும் 125 ஆகிய பிரிவுடன் வாசிக்கப்பட வேண்டிய 126 இன் படி அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் 3ஆம் பிரிவின் ஊடாகத் திருத்தப்பட்ட பிரிவு 30(2)ஐ வியாக்கியானம் செய்யக்கூடாது என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணைக்குழு அடுத்த அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என்பதால் உயர் நீதிமன்றத்தினால் இது குறித்த இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில், 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலை நடத்துவதற்கான மேலதிக பணிகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு குறித்த மனுவில் கோரியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு 

இந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னர் மனுதாரர் தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசிக்கவோ ஆலோசனை பெறவோ இல்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

மேலும், அதிபரின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருப்பது சரியானது என்பதே தனது உறுதியான நிலைப்பாடாகும் என்பதையும் அதிபர் ரணில் அறிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version