முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடையே விரைவில் நேரடி சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது தொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேரடி சந்திப்பு
அதன்படி, குறித்த இரு கட்சிகளினதும் மூத்த உறுப்பினர்களின் தலையீட்டில் இந்த நேரடி சந்திப்பிற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் தேர்தல்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் இணைந்து பயணிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இரு கட்சிகளில் இருந்தும் பேச்சுவார்த்தைகளுக்காக குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
குறித்த குழுக்கள் இணைந்து பல தடவைகள் பல கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இணைந்து பயணிப்பதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும், தனிக்கட்சியாக இணைவதா அல்லது கூட்டணி அமைப்பதா என்பது தொடர்பில் தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
உயர் பதவி
இந்நிலையில், தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஏற்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
சஜித் தலைமை பதவியை வகிக்கும் அதேவேளை, ரணில் உயர்மட்ட ஆலோசகராக பதவி வகிப்பார் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே, ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரிடையே விரைவில் நேரடி சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
