Home இலங்கை அரசியல் எதிர்க்கட்சித் தலைவரின் யாழ் விஜயம்! விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சஜித்

எதிர்க்கட்சித் தலைவரின் யாழ் விஜயம்! விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சஜித்

0

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்களை அடிப்படையாக கொண்டு தாம் யாழ் மக்களுக்கு பொருட்களை வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மாறாக சிறிலங்காவின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பூர்த்தி செய்யும் வகையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும் தமது கட்சி அத்தியாவசிய பொருட்களை வழங்குவது தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் பின்னணியிலேயே, யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை தேர்தல்

சிறிலங்காவின் அரசியலமைப்பில் இரண்டு வகையான அடிப்படை உரிமைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவை அரசியல் மற்றும் குடிசார் உரிமைகளாக பெயரிடப்பட்டுள்ளன.

இவை மாற்றியமைக்கப்பட வேண்டும். பொருளாதார, சமூக, சமய, கல்வி, கலாச்சாரம் உள்ளிட்ட மேலும் பல அடிப்படை உரிமைகளாக பெயரிடப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியும்.

இந்த பின்னணியில், நான் வீணாக பாடசாலைகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும் உதவிகளை வழங்கவில்லை. கல்வி மற்றும் மருத்துவம் எனும் மக்களின் அடிப்படை உரிமைகளை பூர்த்தி செய்யும் வகையில் நான் குறித்த பொருட்களை வழங்கி வருகிறேன்.

தேர்தல்களை அடிப்படையாக கொண்டு நான் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை.

கடந்த 2021 ஆம் ஆண்டு நான் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தேன்.

அந்த ஆண்டு இலங்கையில் எந்தவொரு தேர்தலும் நடைபெறவில்லை. அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நான் கொண்டுள்ளேன்.

இன-மத வேறுபாடுகள்

அவை வெறும் பலகைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல.

நான் இங்கு தொழிற்சாலைகளை திறந்து வைப்பேன். வேலைவாய்ப்புக்களுடன் இந்த தொழிற்சாலைகள் திறந்து கொடுக்கப்படும். தொழிற்சாலைகளின் பெயர் பலகைகளை மாத்திரம் நான் திறந்து வைக்க மாட்டேன்.

அத்துடன், 13 ஆவது திருத்தம் நேற்று அல்லது இன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதல்ல. பல வருடங்களாக இந்த திருத்தம் தொடர்பில் பேசப்படுகிறது. எமது சட்டபுத்தகங்கத்தில் இந்த திருத்தம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படியானால் குறித்த திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏன் இவ்வளவு சிக்கல்?

இலங்கையில் உள்ள மக்களுக்கிடையில் காணப்படும் இன-மத வேறுபாடுகளே இதற்கு காரணம்.

இந்த நிலை மாற வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மதங்களையும் இனங்களையும் தாண்டி, இலங்கையர்களாக நாம் முன்னோக்கி பயணிக்க வேண்டும்.

மாறாக புதிய சட்டங்களையும் அறிமுகப்படுத்துவதன் மூலமும் அரசியலமைப்பின் திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் நாட்டில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய முடியாது. எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது.

NO COMMENTS

Exit mobile version