Home இலங்கை அரசியல் 185 இலிருந்து 370ரூபாவாக அதிகரித்த டொலரின் பெறுமதி! எடுக்கப்பட்ட கடினமான முடிவுகள்

185 இலிருந்து 370ரூபாவாக அதிகரித்த டொலரின் பெறுமதி! எடுக்கப்பட்ட கடினமான முடிவுகள்

0

கடந்த  பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. 2019இல் 185ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி அதன் பின்னர் பொருளாதார நெருக்கடி காலத்தில் 370 ரூபா வரை உயர்ந்தது, எனினும் மக்களின் வருமானம் அதிகரிக்கவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

மொரட்டுவ வில்லோரவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே, ஜனாதிபதி  இதனைக் குறிப்பிட்டார்.

டொலரின் பெறுமதி

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எமது பொருளாதாரத்திற்கு தற்போதைய கடன் சுமையைத் தாங்க முடியாது எனவும், பொருளாதாரம் வீழ்ச்சியடையும் எனவும் நான் இந்த நாட்டை பொறுப்பேற்ற போது சர்வதேச நாணய நிதியம் அறிவித்திருந்தது. எம்மால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை.

கடன் நிலைபேற்றுத்தன்மை இழந்தது. அதன்படி, கடனைச் செலுத்துவதற்கு கடன் நிலைபேற்றுத் தன்மையை நிறுவ வேண்டியிருந்தது. கடன் பெறுவதையும் பணம் அச்சிடுவதையும் நிறுத்த வேண்டி ஏற்பட்டது.

அரச வங்கிகளில் கடன் பெற வேண்டாம் என்றும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த வங்கிகளுக்கு நிதி மூலதனத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இந்த நிலையைக் கருத்திற் கொண்டு அரச வருமானத்தை அதிகரிக்க VAT வரியை உயர்த்த வேண்டியிருந்தது.

இது மிகவும் கடினமான முடிவாக இருந்தது. ஆனால் அது பலன் தரும் என்று எங்களுக்குத் தெரியும். வற் வரியை அதிகரித்து, வருமான வரி முறையையும் மாற்றினோம்.

இதன் பிரதிபலன்கள் தற்போது கிடைத்துள்ளன. அதற்கேற்ப, நாட்டின் வருமானம் அதிகரித்தபோது,ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றது. 370 ரூபாவாக இருந்த டொலர் 300 ரூபாவை எட்டியது. இதனால் பொருட்களின் விலைகள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை படிப்படியாகக் கணிசமாகக் குறையத் தொடங்கியது.

அரச ஊழியர்களின் சம்பளம் 

ஆனால் ஒரு பிரச்சினை இருந்தது. 2019 இல், டொலர் 185 முதல் 190 ரூபா வரை இருந்தது. அதற்கேற்ப பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. டொலர் மதிப்பு 370 ரூபாவாக உயர்ந்தபோது, அதற்கேற்ப பொருட்களின் விலையும் உயர்ந்தது. ஆனால் மக்களின் வருமானம் அதிகரிக்கவில்லை.

வரி விதிப்பால், வருமானம் மேலும் குறைந்தது. எனவே, மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தோம். முதலில், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக ‘அஸ்வெசும’ திட்டத்தை செயல்படுத்தினோம்.

பயனாளிகளின் எண்ணிக்கை 24 இலட்சமாக உயர்த்தப்பட்டது.

2024 இல் வருமானம் அதிகரிக்கும் போது அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நாங்கள் பணியாற்றினோம். 2024 பட்ஜெட்டில் 10,000 வழங்கப்பட்டது. வரும் ஆண்டில் இருந்து உதய ஆர். செனவிரத்ன குழுவின் அறிக்கை நடைமுறைப்படுத்தப்படும்.

எனவே, 2025-2026 காலகட்டத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இரண்டும் அதிகரிக்கும். எனவே, இப்பணியை தொடர்வதா, வேண்டாமா என்பதை இந்த தேர்தலில் முடிவு செய்ய வேண்டும்.

ஏற்றுமதி பொருளாதாரமாக மாறுவதே எங்கள் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version