யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருக்கு எதிராகப்
போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனக் கருதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஐந்து பேருக்கு எதிராகத் தடை
உத்தரவு கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவே நேற்றையதினம்(30) இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்றுமுனதினம்(29) இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு இடையூறு இல்லாமல், அரசியலமைப்புக்குட்பட்ட
வகையில் கவனயீர்ப்பை முன்னெப்பதற்கான உரிமை சகலருக்கும் இருப்பதாக நீதிமன்றம்
தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் விஜயம்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura kumara Dissanayake) யாழ்ப்பாணத்தில் பல்வேறு கூட்டங்களில்
பங்கேற்பதற்காக நாளை யாழ்ப்பாணம் வருகின்றார்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான
போராட்டத்தைத் தடுக்கும் வகையில் ஐந்து பேருக்குத் தடை கட்டளை கோரி பொலிஸார்
நீதிமன்றில் விண்ணப்பித்திருந்தனா்.
இது தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாட்டை நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்வைக்குமாறு நீதிமன்றம்
பிரதிவாதிகளுக்கு கட்டளையிட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண வேலையில்லா
பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ச.சசிகரன், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின்
தலைவர் பிரபாகரன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன்
உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராகத் தடை கட்டளை கோரி வழக்குத் தாக்கல்
செய்யப்பட்ட நிலையில், அதனை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ச.சசிகரன் மற்றும்
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் பிரபாகரன் சார்பில் சட்டத்தரணி
விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்னிலையாகி தனது வாதங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







