காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இன்று இந்தியா – நாகப்பட்டினம் நோக்கிப் பயணிக்கவிருந்த பயணிகளில் 26 பேர் கடைசி நேரத்தில் சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த 26 பயணிகளையும் அவசர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையே ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் சேவை இடம்பெற்று வருகிறது.
இதற்கமைய, இன்று காலை நாகப்பட்டினத்தில் இருந்து 117 பயணிகளுடன் புறப்பட்ட இக்கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து, காங்கேசன்துறையில் இருந்து மீண்டும் இந்தியா நோக்கிப் பயணிப்பதற்காக 146 பயணிகள் துறைமுகத்தில் தயாராகக் காத்திருந்தனர்.
இவ்வாறு காத்திருந்த 146 பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடமைகளைச் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்திய போதே, சந்தேகத்தின் பேரில் 26 பயணிகளைக் கப்பலில் பயணிக்க அனுமதிக்காது அதிகாரிகள் திடீரெனத் தடுத்து வைத்துள்ளனர்.
அவர்கள் எதற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் மற்றும் என்ன காரணத்துக்காக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்பது குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவம் காரணமாகக் காங்கேசன்துறை துறைமுக வளாகத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

