இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் (2024) மொத்தமாக 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (27) சிறப்பு ஊடக சந்திப்பை நடத்தி உரையாற்றும் போதே அமித் ஜெயசுந்தர இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் சதவீதம் 3.45 சதவீதம் என அவர் கூறியுள்ளார்.
பல்கலைக்கழக சேர்க்கை
பெறுபேறுகளின்படி, பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளில் 64.73 வீதமானவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக சேர்க்கைக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், 2023 ஆம் ஆண்டில் இது 64.33 வீதமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொத்த விண்ணப்பதாரர்கள்
அத்தோடு, இந்த ஆண்டு (2024) உயர்தரப் பரீட்சைக்கு 274,361 பரீட்சார்த்திகள் தோற்றியதாகவும், அவர்களில் 177,588 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்ததாகவும் அமித் ஜெயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பரீட்சையில் 222,774 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 51,587 தனியார் விண்ணப்பதாரர்களும் பங்கேற்றதாக அவர் கூறியுள்ளார்.
Source: https://ibctamil.com/article/students-achieved-a-in-all-three-subjects-al-exam-1745738704

