சிறிலங்கா (Sri Lanka) சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) ரஷ்யாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.
ரஷ்யா (Russia) ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை மீண்டும் நாடு கடத்துவது தொடர்பான பேச்சுக்களை இந்த பயணத்தின் போது மேற்கொள்ளவுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் வைத்து, ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ரஷ்யா இராணுவம்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற தரப்பினர் ரஷ்யா இராணுவத்தில் இணைய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், மேலும் சிலர் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் ஊடாக ஆள்கடத்தலுக்குள்ளாகி ரஷ்யா இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்காக போரிட்டு வரும் பலர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன் சிலர் காணாமலும் போயுள்ளனர்.
ரஷ்ய பயணம்
இந்த நிலையில், ரஷ்யாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்டு மீண்டும் நாடு கடத்துவது தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பதற்காக நானும், நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடவும் (Gamini Waleboda) ரஷ்யாவுக்கு பயணமொன்றை மேற்கொண்டுள்ளோம்.

நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக இந்த விடயம் தொடர்பில் நான் கருத்து வெளியிட்டு வந்தேன். தற்போது நேரில் சென்று ஓய்வுபெற்ற இராணுவத்தினரின் நிலையை ஆராய வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும், இந்த பயணத்தின் போது ரஷ்ய வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அதிகாரிகளை நாளை மற்றும் நாளை மறுதினம் சந்தித்து பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
Source: https://ibctamil.com/article/dayasiri-leaves-to-russia-save-soldiers-from-war-1719329652

