திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜபல் நகர் பகுதியில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில், சாரதி உட்பட நால்வர் காயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து, பாதையை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்து கதிர்காமத்திற்கு யாத்திரிகர்களை அழைத்துச் சென்று, அவர்களை இறக்கிவிட்டு திருகோணமலை நோக்கி திரும்பி வந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட நால்வர் காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து மோதியதில் வீடு மற்றும் அதிலிருந்த பல்வேறு உபகரணங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. எனினும், அந்த நேரத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் எவருக்கும் காயம் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

