நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்துள்ள போதிலும், தற்போதைய அரசாங்கம் அதனைத் தடுப்பதற்கு எந்தவொரு படியையும் எடுக்காமல், மந்தகதியான முறையில் தமது அரசியல் பிரச்சாரங்களை மட்டுமே முன்னெடுத்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்றைய தினம் (20) பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் விவரிக்கும் போது, தற்போது நாட்டில் டெங்கு பேரவலம் மிக மோசமாகப் பரவி வருவதாகவும், இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை 53 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், ஜூலை மாதமாகும்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், நேற்று கூட 16 வயதுடைய சிறுமி ஒருவர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாகவும், இவ்வாறான மரணங்கள் அரசாங்கத்தின் கடுமையான அலட்சியப்போக்கினாலேயே ஏற்படுகின்றன என்றும் சாடினார்.
அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ‘Clean Sri Lanka’ திட்டத்தின் மூலம் நாட்டில் எந்தவொரு பகுதியும் தூய்மையாக்கப்படவில்லை என்றும், மாறாக ஏழை பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுநர்களின் வாகனங்களில் இருந்த அலங்காரங்களை அகற்றுவதும், அனைத்து அரச நிறுவனங்களுக்குள்ளும் ஜே.வி.பி காடர்களை உள்வாங்குவதுமே இந்த திட்டத்தின் ஊடாக நடந்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த பேரழிவைக் கட்டுப்படுத்த எந்தவொரு தேவையுமின்றி, அரசாங்கம் தனது அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப, பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை நீடிப்பது போன்ற தங்களுக்குத் தேவையான அரசியல் பணிகளில் மட்டுமே ஈடுபட்டு வருவதாகவும், டெங்கு நோயினால் உயிரிழக்கும் ஒவ்வொரு நபருக்கும் இந்த அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கம் தனது அகந்தையைத் தூக்கி எறிந்துவிட்டு, இந்நாட்டில் டெங்கு மற்றும் கோவிட் பேரழிவைக் கட்டுப்படுத்தி மக்களின் உயிர்களைக் காப்பாற்றிய அனுபவமுள்ள தலைவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்றுச் செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை, தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டில் பல மர்மமான மரணங்கள் மற்றும் கொலைகள் இடம்பெற்று வருவதாகச் சுட்டிக்காட்டிய சாகர காரியவசம், 323 கொள்கலன்கள் திருடப்பட்டமை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்த நபர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை முதன்முதலாகக் காணக்கூடியதாக இருந்தது என்றார்.
அதனைத் தொடர்ந்து, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் முன்னாள் ஜே.வி.பி தொண்டர் என பகிரங்கப்படுத்திய நந்தன குணதிலக்க மர்மமான முறையில் உயிரிழந்தார் என்றும், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தம்மை அச்சுறுத்தியதாக நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்த கபில சந்திரசேன என்பவரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திறைசேரியின் பெருந்தொகை பணம் திருடப்பட்டமை தொடர்பில் சாட்சியமளிக்கவிருந்த அதிகாரி, தனது கையின் நரம்புகளை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் மரணமும், தற்போது முன்னாள் பொலிஸ் மா அதிபர் மிகவும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவமும் இங்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் உயிரிழந்த செய்தி வெளியாவதற்கு முன்பே, அது ஒரு தற்கொலை என பொலிஸ் அதிகாரி ஒருவர் வந்து அறிவிக்கும் விந்தையான நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளது என்றும், அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படும் அல்லது அரசாங்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நபர்கள் மர்மமான முறையில் இறப்பதும், பின்னர் அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகப் பிரச்சாரம் செய்யப்படுவதும் ஒரு ஜனநாயக சமூகத்திற்கு எவ்வகையிலும் பொருத்தமற்றது என்றும் அவர் விவரித்தார்.
இத்தனை தவறுகளையும் செய்துகொண்டு, தற்போதைய பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் ஏன் இந்தளவு தீவிரமாக முயற்சிக்கிறது என்ற கேள்வி தங்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.

