ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்பவர்களை உடன் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலதிக வகுப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவர்களை இனங்கண்டு கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission) தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களம் வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமது திணைக்களத்திற்கு கிடைக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்தை இன்று முதல் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க (Rajitha Ranasinghe) தெரிவித்தார்.
2024 ஜனாதிபதித் தேர்தல் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட பாதுகாப்பு
மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பின் போது விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
Source: https://ibctamil.com/article/action-agent-president-election-2024-opinion-polls-1725330702

