கல்வி உதவித்தொகை பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைகளின் போது ஏற்படக்கூடிய பேரிடர் நிலைமைகள் தொடர்பில் அறிவிப்புகளை வழங்குவதற்காக 5 புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகளுக்கு முன்னரும் பின்னரும் நடைமுறையில் இருக்கும் வகையில் விசேட பேரிடர் மேலாண்மைத் திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாக மையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு பேரிடர் மேலாண்மை மையம் இந்த விசேட திட்டத்தை உருவாக்கியுள்ளது. பரீட்சை காலப்பகுதியில் ஏற்படக்கூடிய அவசர நிலைமைகளுக்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.
பேரிடர் நிலைமை ஏற்பட்டால் மாணவர்களை பரீட்சை மையங்களுக்கு அழைத்துச் செல்லுதல், வினாத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்லுதல் மற்றும் பரீட்சை அதிகாரிகள் தமது கடமைகளை மேற்கொள்ள தேவையான வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை ஆரம்பிக்கும் திகதிக்கு முந்தைய நாளில் குறித்த 5 புதிய அவசர தொலைபேசி இலக்கங்கள் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவசர தேவைகளுக்காக 117 என்ற தொலைபேசி இலக்கமும் தொடர்ந்தும் செயற்பாட்டில் இருக்கும் என பேரிடர் மேலாண்மை மையம் குறிப்பிட்டுள்ளது.
Source: https://samugammedia.com/5-new-phone-numbers-for-emergency-situations-during-exam-time-1786009811

