மக்களின் பிரச்சினைகளில் கருணையுடனும் பொறுப்புடனும் செயல்பட்டு உடனடி தீர்வுகளை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய அவர், “எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களின் பிரச்சினைகளில் காட்டிய அக்கறையை, ஆட்சியில் இருக்கும் இன்றும் வெளிப்படுத்த வேண்டும். இனியாவது கருணையுடன் செயற்பட்டு மக்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
மனிதர்களின் நலனுடன் விலங்குகளின் பாதுகாப்பிற்கும் அரசு முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலை பகுதியில் பொறியில் சிக்கியிருந்த சிறுத்தையை மீட்க கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்
..அதேவேளை, வனஜீவராசிகள் திணைக்களத்தில் 33 கால்நடை மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 17 பேர் மட்டுமே பணியாற்றுவதாகவும், குறைந்த சம்பளம், அதிக வேலைப்பளு, உயிர் ஆபத்து, விடுமுறை மற்றும் அவசரகாலக் கொடுப்பனவுகள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை அவர்கள் எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார். அவர்களுக்கு உரிய பதவி உயர்வு, சலுகைகள் மற்றும் வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இஸ்ரேல் வேலைவாய்ப்பு தொடர்பில் அரசின் ஊடாக அனுப்பப்படும் தொழிலாளர்களுக்கான செலவு குறைவாக இருந்தாலும், தனியார் நிறுவனங்கள் ஊடாகச் செல்லும் தொழிலாளர்கள் அதிக செலவைச் சந்திக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறிய அவர், அரசும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமும் இணைந்து அரசு ஊடாக அனுப்பப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
விவசாயிகளுக்கான நெல் உத்தரவாத விலை ரூ.120 என்பது போதுமானதல்ல என்றும், ஒரு கிலோ நெல் உற்பத்திச் செலவே ரூ.137 என விவசாய அமைச்சரே குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட ரூ.150 உத்தரவாத விலை வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், தொடர்ச்சியான இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் கடன் சுமையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் சொத்துகள் ஏலமிடப்படும் அபாயம் நிலவுவதாகவும் தெரிவித்தார். எனவே, அவர்களின் கடன்களை மறுசீரமைத்து நிவாரணம் வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்

