யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழித் தளத்தில் தொடர்ந்து வரும் அகழ்வாராய்ச்சி, இலங்கையின் தடயவியல் வரலாற்றையே உலுக்கி வருகிறது! இதுவரை நடத்தப்பட்ட விரிவான அகழ்வாய்வுப் பணிகளில், ஒட்டுமொத்தமாக 507 மனித என்புக்கூடுகள் கண்டறியப்பட்டு, அதில் 501 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றின் அனுமதியுடன் தீவிரமாக நடந்து வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 46 ஆவது நாளான இன்று அகழ்வாய்வுக் குழுவினரால் மேலும் 8 புதிய என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருந்த என்புக்கூடுகளில் 7 என்புத் தொகுதிகள் இன்றைய தினம் மிகக் கவனமாக மீட்கப்பட்டு, சான்றுப் பொருட்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 100 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாகவும், துல்லியமாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த அகழ்வாய்வானது, இலங்கையின் தடயவியல் மற்றும் வரலாற்றுத் தேடலில் ஒரு மிக முக்கிய திருப்புமுனையாக மாறியுள்ளது.
இன்னும் எஞ்சியிருக்கும் நாட்களிலும் முழுமையான அகழ்வுப் பணிகளைப் பூர்த்தி செய்து, புதைந்துள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வர நிபுணத்துவக் குழுவினர் களத்தில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர்.

