கம்பஹா மாவட்டம் மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல் போயுள்ளார்.
நேற்று (15) பிற்பகல் மாஓயாவில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாகவும், அவர்களில் இருவரை பிரதேசவாசிகள் மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய மீரிகம பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கி காணாமல் போன மற்றைய நபரைத் தேடும் பணியில் மீரிகம பொலிஸார், பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை,
கொழும்பு பொலிஸ் எல்லைக்குட்பட்ட காலி முகத்துவாரம் பகுதிக்கு அருகிலுள்ள கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று (15) காலை கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பான அடையாளம் மற்றும் மரணத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

