இரத்தினபுரி – அயகம, இந்தலவத்த பகுதியில் உள்ள வன முகாமொன்றின் சுமார் 300 அடி உயரமுள்ள செங்குத்தான பாறை விளிம்பிலிருந்து தவறி விழுந்ததில் 59 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
அயகம – தும்பர, மணன பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
எனினும், அவர் மீண்டும் வீடு திரும்பாததைத் தொடர்ந்து உறவினர்கள் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, இந்தலவத்த ‘காலே கோயில்’ வன முகாமின் நுழைவாயிலுக்கு அருகில் அவரது காலணிகளும் குடையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, அயகம பொலிஸார் இராணுவத்தினருடன் இணைந்து நேற்று (15) ட்ரோன் கமராக்களின் உதவியுடன் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், சுமார் 300 அடி உயரமுள்ள செங்குத்தான பாறை இடுக்கில் குறித்த நபரின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும், அப்பகுதியின் கடினமான நிலப்பரப்பு காரணமாக சடலத்தை உடனடியாக அணுக முடியாத நிலையில், நேற்றிரவு வரை மேற்கொள்ளப்பட்ட மீட்பு முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
இதனையடுத்து, இன்று (16) இராணுவக் கமாண்டோப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சடலத்தை மீட்பதற்கான சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நபர் பாறையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா என்பது தொடர்பில் அயகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

