யாழ்ப்பாணம், பருத்தித்துறை சாலை – வட்டுக்கோட்டை இடையிலான இ.போ.ச. பஸ்ஸில் பெண் பயணி ஒருவர் தவறவிட்ட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட சாரதியும் நடத்துநரும், அதனை உரிய பெண்ணிடம் ஒப்படைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை சாலையில் இருந்து வட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற 767ஆம் வழித்தடத்தைச் சேர்ந்த 4241 இலக்க இ.போ.ச. பஸ்ஸின் மதிய சேவையில் குறித்த பெண் பயணித்துள்ளார்.
வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற மரணச் சடங்கில் கலந்துகொண்ட பின்னர், அவர் உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னரே தனது கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுண் தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்ததை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து, அவர் சென்ற வழித்தடங்களில் தேடியபோதும் சங்கிலியை கண்டுபிடிக்க முடியவில்லை. சங்கிலி கிடைக்காது என்ற கவலையுடன், மீண்டும் வட்டுக்கோட்டையில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்ல அதே பஸ்ஸில் அவர் ஏறியுள்ளார்.
இதன்போது தனது தங்கச் சங்கிலி காணாமல் போனமை குறித்து பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநரிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது, அவர் அமர்ந்திருந்த ஆசனத்தில் தங்கச் சங்கிலி காணப்பட்டதாகவும், அதனை மீட்டு பத்திரமாக வைத்திருப்பதாகவும் சாரதியும் நடத்துநரும் தெரிவித்துள்ளனர். பின்னர் சங்கிலியை உரிய பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை டிப்போவுக்குச் சென்ற பின்னர் பஸ்ஸை சுத்தம் செய்தபோது, சங்கிலியின் ‘எஸ்’ வடிவிலான இணைப்புப் பகுதியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனையும் சாரதியும் நடத்துநரும் உரிய பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த பருத்தித்துறை டிப்போவைச் சேர்ந்த சாரதி மனோகரன் சயந்தன் மற்றும் நடத்துநர் இராசநாயகம் பிறின்சிராஜா ஆகியோரின் நேர்மையான செயற்பாட்டை பஸ்ஸில் பயணித்தவர்களும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.



