தொடருந்து திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடமை நேரங்களில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதையும், தொடருந்து சேவை தொடர்பான முக்கியமான தகவல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதையும் கட்டுப்படுத்தி புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்களத்தின் சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடமை நேரங்களிலும், அதனுடன் தொடர்புடைய சந்தர்ப்பங்களிலும் சமூக வலைத்தளங்கள் மூலம் உணர்திறன் வாய்ந்த தகவல்களை வெளியிட்டு வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற தகவல்கள் வெளியில் பகிரப்படுவதால், தொடருந்து சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் திணைக்களத்தின் ஒழுக்கம் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, தொடருந்து பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் இந்த விசேட சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி செயற்படும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தொடருந்து திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ தகவல்களை வெளித்தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வழங்குவதற்கு தொடருந்து பொது முகாமையாளர், உத்தியோகப்பூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: https://samugammedia.com/ban-on-social-media-use-during-working-hours-1787805064

