நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 25 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த 7 மாவட்டங்களிலும் 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சியின் காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 6 மாவட்டங்களைச் சேர்ந்த 22 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 24,144 குடும்பங்களைச் சேர்ந்த 75,734 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதில், அதிகளவானோர் மொனராகலை மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் 11,074 குடும்பங்களைச் சேர்ந்த 35,639 பேருக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,547 குடும்பங்களைச் சேர்ந்த 28,253 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 2,823 குடும்பங்களைச் சேர்ந்த 8,847 பேருக்கும் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொலன்னறுவை மாவட்டத்தில் 683 குடும்பங்களைச் சேர்ந்த 2,646 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 79 பேருக்கும் குடிநீர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

