சிறிலங்கன் (SriLankan Airlines) எயார்லைன்ஸ் விமான சேவையின் பங்குகளின் 51 சதவீதத்தை விற்பனை செய்ய கடந்த அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை நிறுத்துவதற்கு அமைச்சரவையில் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (30) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) முதலாவது அமைச்சரவை கூட்டத்தின் போதே, ஜனாதிபதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கன் விமான சேவையின் பங்குகளை விற்பனை செய்ய அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு பிரிவு நடவடிக்கை எடுத்திருந்ததாக குறிப்பிடப்பட்டது.
சிறிலங்கன் எயார்லைன்ஸ்
இதற்கமைய, தனியார் முதலீட்டாளர்களை இணைத்துக்கொள்வதற்காக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனைக் கைவிட்டு சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் முகாமைத்துவத்தை செயற்திறன் மிக்கதாக மாற்றுவது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் புதிய அரசாங்கம் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையை தனியார் மயப்படுத்தும் திட்டத்தினை கைவிடவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பேரவையின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமைச்சரவையில் கடந்த அரசாங்கத்தின் தீர்மானத்தை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/srilankan-airlines-flight-service-cabinet-decision-1727758768

