Home இலங்கை அரசியல் அதிபர் தேர்தல் 2024:தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கும் அனந்தி சசிதரன்

அதிபர் தேர்தல் 2024:தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கும் அனந்தி சசிதரன்

0

ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று(14) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே தான் தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்கும் விடயத்தை அனந்தி தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 45 சிவில் அமைப்புகளின் கூட்டணியான தமிழ் மக்கள் சபையின் தலைமையில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டுமென்ற கலந்துரையாடல்கள் கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன.

அதிபர் தேர்தல்

தமிழ் மக்கள் சபையின் தலைமையில் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஆழமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புளொட், தமிழ்த் தேசியக் கட்சி உட்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புக்களும் இந்தக் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டன.

தொடர்ச்சியாக இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வரும் பின்புலத்திலேயே அனந்தி சசிதரன் தான் தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்கவுள்ளார் என்று அறிவித்துள்ளார்.

அனந்தி அதிரடி அறிவிப்பு

எனினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பதவிகளில் இருந்தவர்கள் எவரும் அதிபர் தேர்தலில் களமிறக்கப்பட கூடாதென்ற நிலைப்பாட்டின் பிரகாரமே சிவில் அமைப்புக்களின் கூட்டணியான தமிழ் மக்கள் சபை கலந்துரையாடல்களை நடத்தி வந்தது.

பேராசிரியர் ஒருவரைக் களமிறக்கும் அடிப்படையிலான கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தன.

இவ்வாறு பேச்சுக்கள் தொடரும் சூழலில் அனந்தி சசிதரன், தான் தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்கவுள்ளார் என்று எந்தப் பின்புலத்தில் அறிவித்துள்ளார் என்பது தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/h_cnQAJK_0I

NO COMMENTS

Exit mobile version