கடந்த மாதம் பெய்ரூட்டில் உயர்மட்ட தளபதி புவாட் ஷுக்ர் (Fuad Shukr) கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கும் முகமாக இன்று (25) ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலை(israel) நோக்கி 320க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா(Hezbollah) அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,
நூற்றுக்கணக்கான கத்யுஷா (Katyusha) ரொக்கெட்டுகளால் வடக்கு இஸ்ரேலில் உள்ள 11 இராணுவ தளங்களை குறிவைத்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலின் “முதல் கட்டம்”
இஸ்ரேலுக்கு எதிரான தனது தாக்குதலின் “முதல் கட்டம்” முடிந்துவிட்டதாக அது கூறியது.
“இது இஸ்ரேலிய முகாம்கள் மற்றும் தளங்களை குறிவைக்கும் கட்டம்”, என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் மீது தாக்குதல்
இதேவேளை ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனானிலுள்ள (lebanon) அந்த அமைப்பின் இலக்குகள் மீது விமான தாக்குதலை நடத்தியுள்ளது.
ஹிஸ்புல்லாவின் தளங்கள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து லெபனான் குடிமக்கள் உடனடியாக வெளியேறவேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அவசரமாக கூட்டப்பட்ட பாதுகாப்பு அமைச்சரவை
இந்த தாக்குதல்களை அடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) தனது பாதுகாப்பு அமைச்சரவையின் அவசர கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்தார்.
நெதன்யாகுவின் அலுவலகம், பிரதமர்மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட்(Yoav Gallant) ஆகியோர் டெல் அவிவில் உள்ள இராணுவ தளத்தில் இருந்து “நிலைமையை நிர்வகித்து வருவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை அடுத்து இஸ்ரேல் 48 மணிநேரம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.அத்துடன் தாக்குதலை அடுத்து நிறுத்தப்பட்ட இஸ்ரேல் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Source: https://ibctamil.com/article/israel-strikes-hezbollah-targets-in-lebanon-1724561660
