Home உலகம் கனடாவின் புதிய விசா விதிகள் : சிக்கலில் சர்வதேச மாணவர்கள் – புலம்பெயர்ந்தோர்

கனடாவின் புதிய விசா விதிகள் : சிக்கலில் சர்வதேச மாணவர்கள் – புலம்பெயர்ந்தோர்

0

கனடாவில் புலம்பெயர்ந்தோரின் விசா முறைகளில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், புலம்பெயர் மக்களைக் கட்டுப்படுத்த கனடா மேற்கொண்டுள்ள சமீபத்திய நடவடிக்கைகள் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது வேலை மற்றும் வதிவிட அனுமதிக்கு விண்ணப்பிப்பவர்களையும் எதிர்மறையாக பாதிக்கும் என தெரிவிக்கப்படுவதுடன் இந்த புதிய விதிகள் பெப்ரவரி தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளன.

கனேடிய எல்லை 

அத்தோடு, கனேடிய எல்லை அதிகாரிகளுக்கு மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் விசா நிலையை எந்த நேரத்திலும் மாற்றுவதற்கு தடையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், புதிய குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் கனேடிய எல்லைப் பணியாளர்கள் தற்காலிக வதிவிட ஆவணங்களை மறுக்க அல்லது நிராகரிக்க தற்போது அதிகாரம் பெற்றுள்ளனர்.

அதாவது, பணி அனுமதி மற்றும் மாணவர் விசாக்கள் உள்ளிட்ட அத்தகைய ஆவணங்களை தற்போது எல்லை அதிகாரிகள் ரத்து செய்யலாம் இருப்பினும், அனுமதி மற்றும் விசாக்களை நிராகரிக்க சில வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், அங்கீகரிக்கப்பட்ட தங்கியிருக்கும் காலம் முடிவடைந்தவுடன் அந்த நபர் கனடாவை விட்டு வெளியேறுவார் என ஒரு அதிகாரி நம்பவில்லை என்றால், அவர்கள் கனடாவில் தங்கியிருக்கும் போது கூட அவர்களது அனுமதியை நிராகரிக்கலாம் அல்லது ரத்து செய்யலாம்.

நிச்சயமற்ற தன்மை

இந்த புதிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றவாசிகளுக்கு மிகவும் விருப்பமான இடமாக கனடா உள்ளது.

அரசாங்கத் தரவுகளின்படி, தற்போது கனடாவில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்கள் மட்டும் 4.2 லட்சத்திற்கும் அதிகமான இந்தியப் பிரஜைகளைக் கொண்டுள்ளனர்.

ஒரு மாணவர், தொழிலாளர் அல்லது புலம்பெயர்ந்தோர் நிராகரிக்கப்பட்டால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

அத்தகைய நபர் ஏற்கனவே கனடாவில் படித்து, பணிபுரியும் அல்லது வசிக்கும் போது அனுமதி ரத்து செய்யப்பட்டால் குறிப்பிட்ட திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version