இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வேட்பாளராக களமிறங்க வேண்டிய தேவை இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
வேட்பாளராக களமிறங்காமலேயே, அவர் மீண்டும் இலங்கையின் அதிபராக தெரிவு செய்யப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ரணில் மாத்திரமே அதிபர்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அதிபராக ரணில் விக்ரமசிங்க மாத்திரமே தெரிவு செய்யப்பட வேண்டும்.
இலங்கையின் பொருளாதாரத்தை நிலையான பாதையில் கொண்டு செல்லக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க.
ஐந்து ஆண்டு கால அவகாசம்
இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கான ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்கள் சரிவர பின்பற்றப்படாவிட்டால், கடந்த 2022 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மீண்டும் ஆரம்பமாகும்.
இலங்கையின் நிலையை அதிபராக ரணில் விக்ரமசிங்க மேம்படுத்துவதற்கு ஐந்து ஆண்டு கால அவகாசம் அவருக்கு வழங்கப்பட வேண்டும்.
அத்துடன், இந்த ஐந்து ஆண்டுகளின் பின்னர், தமக்கு பிடித்த ஒருவரை அதிபராக்கும் நடவடிக்கையில் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் ஈடுபட முடியும்” என தெரிவித்துள்ளார்.
Source: https://ibctamil.com/article/ranil-doesnt-need-to-contest-presidential-election-1718207478
