புதிய இணைப்பு
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அனைத்து விதமான தாக்குதல்களும் இன்று மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
புது டெல்லியில் இன்று மாலை (10.05.2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் நடைமுறையானது.
தரை வழி, வான் வழி, கடல் வழி என இரு நாட்டு முப்படைகளும் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இராணுவ தலைமை இயக்குநர்கள் தரப்பிலிருந்து இந்திய இராணுவ தலைமை இயக்குநரகத்தை தொடர்புகொண்டு பேசினார்.
இன்று மாலை 3.35 மணியளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இரு தரப்பும் போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளன”என்றார்.
முதலாம் இணைப்பு
இந்தியாவும் (India) , பாகிஸ்தானும் (Pakistan) முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் உத்தியோகபூர்வ ட்ரூத் பக்கத்தில் பதிவொன்றை வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த சமூக ஊடக பதிவில் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாவது “அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நீண்ட இரவு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
போர் நிறுத்தம்
“பொது அறிவு மற்றும் சிறந்த நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!”என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் டார் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தெரிவித்திருந்த நிலையில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/QELUrrao4xs
