அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்(donald trump) தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ்(Mike Waltz) தனது பதவியிலிருந்து விலக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏமனில் உள்ள எரிபொருள் சேமிப்பு வளாகத்தின் மீது அமெரிக்கப் படைகள் திட்டமிட்ட தாக்குதலைக் குறிப்பிட்டிருந்த சிக்னல் செய்தியிடல் பயன்பாட்டில் தற்செயலாக ஒரு பத்திரிகையாளரைச் சேர்த்ததை அடுத்து அவர் தனது பதவி விலக முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போர் இரகசியங்களை வெளிப்படுத்திய பத்திரிகையாளர்
அந்த விடயத்தில் தற்செயலாக சேர்க்கப்பட்டதால், சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் அந்த போர் இரகசியங்களை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மைக் வால்ட்ஸ், ஜனாதிபதி ட்ரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில் அவரது மூத்த தலைமைக் குழுவில் நியமிக்கப்பட்ட முதல் உறுப்பினர் ஆவார்.
வால்ட்ஸ் மட்டுமின்றி அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அலெக்ஸ் வோங்கும் பதவிவிலகத் தயாராக இருப்பதாக சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது, அதே நேரத்தில் ட்ரம்ப் விரைவில் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பொக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.
முதலாவதாக பதவி விலகும் முக்கிய அதிகாரி
ட்ரம்ப் இரண்டாவது முறையாக ஜனாதிபதியான பிறகு, அவரது நிர்வாகத்தில் இருந்து முக்கிய அதிகாரி ஒருவர் வெளியேறுவது இதுவே முதல் முறையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் இந்த அறிக்கைகளை உறுதிப்படுத்தவில்லை. “எந்த அறிவிப்பையும் முன்கூட்டியே தெரிவிக்க விரும்பவில்லை” என்று அவர் கூறினார்.
சிக்னல் செயலியில் அமெரிக்க அதிகாரிகள் அடங்கிய ரகசிய உரையாடலுக்கான குழுவில் தி அட்லாண்டிக்கின் தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பெர்க்கை மைக் வால்ட்ஸ் சேர்த்துவிட்டார். இது வால்ட்ஸ் கவனக்குறைவாகச் செய்த தவறுதான் என்று கூறப்படுகிறது.
ஆனால், இந்தத் தகவல் கசிவு நடந்த சில வாரங்களுக்குள் மீண்டும் ஏமன் தாக்குதல் பற்றிய தகவல்கள் மீண்டும் கசியவிடப்பட்டது.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தனது மனைவி ஜெனிஃபர், பத்திரிகையாளரும் முன்னாள் பொக்ஸ் நியூஸ் தயாரிப்பாளருமான, அவரது சகோதரர் பில், வழக்கறிஞர் டிம் பர்லாடோர் ஆகியோருடன் ஏமன் மீதான தாக்குதல் குறித்த ரகசியத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
ஏமனில் உள்ள இலக்குகளை குண்டுவீச அமெரிக்க போர் விமானங்கள் புறப்படும் நேரங்கள் உட்பட தாக்குதல் திட்டத்தை பற்றிய தகவல்கள் வெளியில் கசிந்தன. அடுத்தடுத்த நடந்த இராணுவ ரகசியக் கசிவு காரணமாக, பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்.
