அனுராதபுரம், இப்பலோகம – கலாவெ வீதியில் நேற்று (13) அதிகாலை இடம்பெற்ற துயரமான மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கலாவெ பகுதியிலிருந்து இப்பலோகம நோக்கி இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வாகனம் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்றைய நபர் காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவர் 29 வயதுடைய பாடசாலை ஆசிரியர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இப்பலோகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 10 மாணவர் ஒருவர், பரீட்சை முடிந்த பின்னர் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்றபோது காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நண்பகல் சுமார் 12.30 மணியளவில், பாடசாலையில் பரீட்சையை எழுதி முடித்த 10 மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறி, ஓல்ரிம் பகுதியின் கொத்மலை ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது, மாணவர்களில் ஒன்பது பேர் பாதுகாப்பாக கரை திரும்பிய நிலையில், ஒரு மாணவன் மாத்திரம் நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.காணாமல் போனவர், 15 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனைத் தேடும் பணிகளை லிந்துலை பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.


