புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 27ஆம் கட்டை பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயும், அவரது இளம் மகளும் அடுத்தடுத்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக ராஜாங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் 52 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சமுத்ரா அலுவிஹார மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்த அவரது மூத்த மகளான 32 வயதுடைய சஜீனி மகேஷிகா ஆகிய இருவருமே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த முதலாம் திகதி இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இதில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகள் கடந்த 2ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தொடர்ந்தும் உயிருக்காகப் போராடி வந்த தாயும் நேற்று (04) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து ராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

