சமகாலத்தில் காடுகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், கதிர்காம பாதயாத்திரையில் பங்கேற்கும் “சுப்பிரமணி” எனும் செல்லப்பிராணி மற்றும் அதனுடன் வரும் அடியார்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அதனை காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கதிர்காம பாதயாத்திரைக் குழுவுடன் சுமார் 470 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை நடைபயணமாக கடந்து வரும் “சுப்பிரமணி” எனும் இந்தச் செல்லப்பிராணி, அண்மையில் சமூக வலைத்தளங்களில் உலகளாவிய ரீதியில் பெரும் பிரபலமடைந்துள்ளது.
இந்நிலையில் சுப்பிரமணிக்குக் காட்டுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவியதைத் தொடர்ந்து,
வனஜீவராசிகள் திணைக்களத்தின் சட்ட ஆலோசகரும் சுற்றாடலியலாளருமான கந்தையா பிரியதர்சனி கூறியதாவது,
செல்லப்பிராணி பாதயாத்திரையில் பங்கேற்பது பிரச்சினையல்ல என்றாலும், காட்டுப்பகுதியில் பயணிக்கும் மனிதர்களின் பாதுகாப்பும், அந்தச் செல்லப்பிராணியின் பாதுகாப்பும் முக்கியமான காரணங்களாக இருப்பதால் அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவித்தார்.
காட்டுப்பாதை ஜூலை 9 அல்லது 10 ஆம் திகதிகளில் திறக்கப்படுவதற்கு முன்னர், பாணமையில் வைத்து சுப்பிரமணியை பொறுப்பேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர், பாதை திறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆலயக் குருவின் வேண்டுகோளுக்கு இணங்க குறிப்பிட்ட விதிமுறைகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டு, சுப்பிரமணி வாகனத்தின் மூலம் கதிர்காமத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அங்கு பிள்ளையாரடி பகுதியில் பாதயாத்திரைக் குழுவினரிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், உகந்தை காட்டுப்பாதை ஆரம்பிக்கும் பாணமை பகுதியில் கடந்த மூன்று நாட்களில் சிறுத்தை தாக்குதல்களில் இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் இரண்டு செல்லப்பிராணிகள் சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதனால், காட்டுப்பகுதிகளில் மனிதரும் விலங்குகளும் தொடர்புடைய ஆபத்துகள் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source: https://samugammedia.com/subramani-is-not-allowed—new-rules-on-travel-1782978560

