மட்டக்களப்பு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருடிச் சென்றவர்கள் பின்னர் அதனை மீண்டும் உரிய வீட்டின் வாசலிலேயே கொண்டு வந்து நிறுத்திய விசித்திரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி தபாலக வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் இருவரால் திருடப்பட்டிருந்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகியிருந்ததுடன், அதனை அடிப்படையாகக் கொண்டு திருடர்களை கைது செய்வதற்கான தீவிர விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை அதே மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற நபர்கள் மீண்டும் அதே வீட்டின் வாசலிலேயே கொண்டு வந்து நிறுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
காலை வீட்டு உரிமையாளர் வெளியே செல்ல முற்பட்டபோது, திருடப்பட்ட தனது மோட்டார் சைக்கிள் அதே இடத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும், மோட்டார் சைக்கிள் மட்டுமன்றி அதன் ஆவணங்கள் மற்றும் தலைக்கவசம் ஆகியவையும் எந்த சேதமும் இல்லாமல் வாகனத்துடன் சேர்த்து வைத்துவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசித்திரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. வாழைச்சேனை பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

