நாட்டில் டெங்கு தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்த ஆண்டில் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவால் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த ஆண்டில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 74,478 ஆக அதிகரித்துள்ளது.
ஜூலை மாதத்தின் முதல் 17 நாட்களில் மட்டுமே 19,100 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
குறிப்பிட்ட நாட்களிலேயே ஆயிரக்கணக்கான நோயாளர்கள் பதிவானது டெங்கின் தீவிரத்தை உறுதிப்படுத்துகிறது.
நாட்டிலேயே அதிகப்படியாக மேல் மாகாணத்தில் தான் டெங்கு பாதிப்பு தொடர்ந்து பதிவாகி வருகிறது.
மாகாண ரீதியில் பார்க்கும்போது, கம்பஹா மாவட்டத்தில் தான் நாட்டின் மிக உயர்ந்த பாதிப்பாக 15,596 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதற்கு அடுத்த படியாக வவுனியா மாவட்டத்திலும் அதிகமாக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு உயிரிழப்புக்களும் பதிவாகின.
நாட்டில் தற்போது டெங்கு தீவிரமாக பரவி வருவதையடுத்து அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு விசேட ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கமைய டெங்கு பரவும் வகையிலான பொருட்களையும் அதன் பகுதிகளையும் கண்காணிப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கை ஒழிப்பதற்கு கடற்படை, இராணுவப்படை உள்ளிட்டோரும் சகல துறையினரும் ட்ரோன் வரையில் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
எனவே டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தவும், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழிக்கவும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Source: https://samugammedia.com/dengue-intensifies–three-deaths-in-24-hours-1784383516

