யாழ்ப்பாண நகரில் இலங்கைப் படையினர் சோள விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் உள்ளூர் சிறு வியாபாரிகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் தகவலின்படி, வலிகாமம் வடக்கு பகுதியில் இன்னமும் விடுவிக்கப்படாமல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் பூர்வீகக் காணிகளில் மேற்கொள்ளப்படும் விவசாயப் பயிர்ச்செய்கையிலிருந்து அறுவடை செய்யப்படும் சோளங்களே யாழ்ப்பாண நகருக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன என தெரிவிக்கப்படுகிறது.

வலிகாமம் வடக்கில் பல குடும்பங்களின் சொந்த நிலங்கள் நீண்டகாலமாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அவற்றை விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தங்களது சொந்த வீடுகள் மற்றும் நிலங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாமல், பலர் வாடகை வீடுகளிலும் உறவினர்களின் இல்லங்களிலும் இடம்பெயர்ந்த வாழ்க்கையை தொடர்ந்துவருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், அந்தக் காணிகளில் படையினர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு, அறுவடை செய்யப்படும் சோளங்களை தங்களது வாகனங்களில் யாழ்ப்பாண நகருக்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்வதாக கூறப்படுவது மக்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, யாழ்ப்பாண நகரில் சோள விற்பனையை நம்பி வாழும் சிறு வியாபாரிகள் சந்தைப் போட்டியில் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருவதாகவும், தங்களது அன்றாட வருமானம் குறைந்து வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், மக்களின் சொந்த நிலங்கள் இன்னமும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படாத நிலையில், அவற்றை பயன்படுத்தி பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது பெரும் வேதனையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி, படையினரின் வியாபார நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதுடன், அபகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் காணிகளை சட்டப்படி உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்

