பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகள் மீது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் பல்கலைக்கழகங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உயர்கல்வித் துறை தொடர்பான உபகுழுக் கூட்டம் பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, உயர்கல்வித் துறையில், குறிப்பாக பல்கலைக்கழகங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை கட்டுப்படுத்துவதில் பல்கலைக்கழகங்களுக்கு தார்மீகப் பொறுப்பு இருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பகிடிவதையால் பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் விசாரணை பொறிமுறைகள் மீது நம்பிக்கை கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குவது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, பகிடிவதை தொடர்பான விசாரணைகள் வினைத்திறன்மிக்க வகையில் முன்னெடுக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விரைவாக நிவாரணம் கிடைக்கும் வகையிலும் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
இதனிடையே, பல்கலைக்கழகங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட நியமனங்கள் கூட இதுவரை நிரப்பப்படாமல் இருப்பது தொடர்பிலும் பிரதமர் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களிடம் கேள்வியெழுப்பினார்.
அனுமதிக்கப்பட்டுள்ள வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் அவர் உபவேந்தர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுகத் ரத்னாயக உள்ளிட்டோரும், பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

