திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக இன்று (06) திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக அமைதி வழிப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குச்சவெளி பிரதேச சபையின் சில உத்தியோகத்தர்களால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதேச சபையின் சிற்றூழியர் ஒருவரை தவிசாளர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு நீதி கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதன்போது, “ஊழியருடனான தவிசாளரின் அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்”, “இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவரை மீண்டும் தவிசாளராக தொடரவிட்டதன் விளைவே இது”, “அலுவலக அரசியலில் அலுவலர்களை தூண்டாதே”, “பழிவாங்கலை நிறுத்து” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட ஊழியருக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.


