முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிள்ளையானுடன் கோட்டாபய இருக்கும் படங்கள் தொடர்பில் நீதிமன்றில் வெளியான தகவல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான மேலதிக வாதங்கள் ஜூலை 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

குறித்த மனு நேற்று மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது, மனுதாரரான கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றில் விடயங்களை முன்வைத்தார்.

”உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் நீதிபதி அல்விஸ் ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஆகியவற்றின் எந்தவொரு அறிக்கையிலும் மனுதாரரான கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

மேலும், கடமை தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரித்த 7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் வழங்கிய தீர்ப்பிலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்து ஒரு வார்த்தையேனும் குறிப்பிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

ஸஹ்ரான் ஹாஷிமின் தீவிரவாதச் செயற்பாடுகள் குறித்து 2017ஆம் ஆண்டு முதல் புலனாய்வுப் பிரிவினர் தமக்குத் தெரிவித்திருந்ததாகவும், அது தொடர்பான விசாரணைக் கோப்பு காவல்துறையினரால் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தும், அதற்கு எதிராக எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை எனத் தெரிவித்த சட்டத்தரணி, அவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயற்பட்டவர்களே தற்போது கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்யத் தயாராகி வருவதாகக் குற்றம் சாட்டினார்.

எதிர்மனுதாரர்களால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அஸாத் மௌலானாவின் வாக்குமூலப் பிரதியுடன் சில படங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிள்ளையான் (சிவனேசதுரை சந்திரகாந்தன்) மற்றும் கருணா (விநாயகமூர்த்தி முரளிதரன்) ஆகியோருடன் கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை ஏற்றுக்கொண்ட சட்டத்தரணி, அந்தப் படங்கள் அரசியல் கூட்டங்களின் போது எடுக்கப்பட்டவை என்றார்.

அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது இவ்வாறான படங்களை எடுப்பது சாதாரணமான ஒன்று எனவும், அதன் மூலம் மனுதாரர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

சட்டமா அதிபர் திணைக்களம் முற்றிலும் பழிவாங்கும் நோக்கோடும், தீயநோக்கத்துடனுமே இந்தப் படங்களை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரி வாழும் அஸாத் மௌலானா, பிரித்தானியாவின் ‘செனல் 4’ (Channel 4) ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் மூலம் இலங்கையின் நீதித்துறை சிதைந்துள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

லசந்த விக்ரமதுங்க கொலை மற்றும் கடத்தல்கள் போன்ற அனைத்துக் குற்றங்களையும் ராஜபக்ஷவினர் மீது சுமத்த அஸாத் மௌலானா செயற்பட்டுள்ள நிலையில், அத்தகைய ஒருவரின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு தனது கட்சிக்காரரைக் எவ்வாறு கைது செய்ய முடியும்” என ஜனாதிபதி சட்டத்தரணி கேள்வி எழுப்பினார்.

முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இந்த மனு மீதான மேலதிக விசாரணைகளை ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டது.

Source: https://samugammedia.com/information-released-in-court-about-pictures-of-gotabaya-with-a-child-1782364616

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.