மூதூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.டி. தாஹிஸ் இன்று (03) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் மூதூர் பிரதேச சபையின் ஆட்சிப்பொறுப்பு ஐக்கிய மக்கள் சக்தி வசமாகியுள்ளது.
புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான விசேட கூட்டம் இன்று காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.டி.எம். ராபி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, புதிய தவிசாளராக எம்.டி. தாஹிஸின் பெயரை இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எஸ். பிரகலாதன் முன்மொழிந்ததுடன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர் ராஜரூபன் வழிமொழிந்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுக்கிடையில் எட்டப்பட்ட ஒரு வருட தவிசாளர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், முன்னாள் தவிசாளர் எஸ். பிரகலாதன் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த தெரிவு இடம்பெற்றது.
22 உறுப்பினர்களைக் கொண்ட மூதூர் பிரதேச சபையில், புதிய தவிசாளர் பதவிக்காக வேறு எந்த வேட்பாளரும் முன்மொழியப்படாததால், எம்.டி. தாஹிஸ் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.
இதன்போது, சுயேட்சைக் குழு உறுப்பினர் ஒருவர் இரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தாலும், போட்டி வேட்பாளர் இல்லாத காரணத்தால் உள்ளூராட்சி சட்டத்தின் கீழ் வாக்கெடுப்பு நடத்த முடியாது என உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.
Source: https://samugammedia.com/md-dahis-elected-as-new-chairman-of-muthur-pradeshiya-sabha-1785747501

