இலங்கையில் (Sri Lanka) சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் (West Indies) மகளிர் அணியானது 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி20 தொடர்களில் விளையாடியது.
இதில் முதலில் நடைபெற்று ஒருநாள் தொடரை இலங்கை மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ரி20 தொடரானது நடைபெற்றது.
இதில் முதல் ரி20i போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி வெற்றி பெற்றது.
சர்வதேச கிரிக்கெட்
இந்த நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ரி20 போட்டி நேற்று (28) ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் விஷ்மி குணரட்ன (Vishmi Gunaratne) 2 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் இணைந்த சமரி அத்தபத்து (Chamari Athapaththu) – ஹர்ஷிதா மாதவி (Harshita Madhavi) ஆகிய இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி
இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஃபி ஃபிளெட்சர், ஆலியா அலீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் ரி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது.
முன்னதாக இலங்கை மகளிர் அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.