மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால்தான் எதிர்வரும் 21ஆம் திகதி அநுர அரசாங்கத்துக்கு எதிராக பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம், இந்தப் பேரணியில் சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எமது
விருப்பம் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசியல் கொள்கை வேறுபாட்டினால் இந்தப் பேரணியில் பங்கேற்கப்
போவதில்லை எனவும், ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள்
குறிப்பிடுவது தவறானது, ஏனெனில் அரசியல் கூட்டணியமைக்க நாங்கள் அழைப்பு
விடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
முரண்பாடுகள்
அவர் மேலும் கூறுகையில், பொலிஸ் சேவையில் கீழ் நிலையில் உள்ள ஒருவர் பொலிஸ்மா அதிபராக
நியமிக்கப்பட்டால், பதவி நிலையில் சிரேஷ்டத்துவத்தில் இருப்பவர்கள்
முரண்படுவார்கள். பொலிஸ்மா அதிபருக்கும், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்களுக்கும்
இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும். பனிப்போர் நிலவும்.

கடந்த காலங்களிலும்
இவ்வாறான நிலை காணப்பட்டது.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையிலான முரண்பாட்டை ஊடகங்களுக்குக்
குறிப்பிடுவதை பொலிஸ்மா அதிபர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பொலிஸ்மா அதிபரின்
செயற்பாடுகள் வெறுக்கத்தக்கவை. அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு
அமைய செயற்படும் போது இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படும்.
அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாடு மற்றும் போலியான வாக்குறுதிகளுக்கு எதிராக
எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம்.
ஒரு சில எதிர்க்கட்சிகள் இந்தப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை. இருப்பினும்
இந்தப் பேரணிக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளன.
தவறான கருத்து
ஒரு
எதிர்க்கட்சி மாத்திரம் இந்தப் பேரணிக்குக் கடும் எதிர்ப்பை
வெளிப்படுத்தியுள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால்தான்
எதிர்வரும் 21ஆம் திகதி அநுர அரசாங்கத்துக்கு எதிராகப் பேரணியை ஏற்பாடு
செய்துள்ளோம்.
அரசியல் கொள்கை வேறுபாட்டினால் இந்தப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது தவறானது.

ஏனெனில்
அரசியல் கூட்டணியமைக்க நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை என்பதை எதிர்க்கட்சிகள்
முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.
அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்
என்பதே எமது விருப்பம் என குறிப்பிட்டுள்ளார்.

