லண்டனில் உள்ள வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் அழைப்பைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணத்திற்காக முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்மசிங்க செலவிட்ட ரூ.16.6 மில்லியன் குறித்து இலங்கை பொலிஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அதன்படி, இலங்கையில் இருந்து லண்டனுக்கு வந்த இலங்கை ரகசிய பொலிஸ் அதிகாரிகள், லண்டனில் உள்ள முன்னாள் உயர் ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவை 17ஆம் தேதி திங்கட்கிழமை உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வரவழைத்து, ஏழு மணி நேரத்திற்கும் மேலாக விசாரித்து, வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
முன்னாள் உயர் ஸ்தானிகரிடம் சிஐடி அதிகாரிகள்
இதற்குக் காரணம், 2023 செப்டெம்பரில் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக நிகழ்வுக்கு ரணில் வந்தபோது, சரோஜா சிறிசேன லண்டனில் உயர் ஸ்தானிகராக இருந்துள்ளார்.

2023 நவம்பரில் சரோஜா சிறிசேன உயர் ஸ்தானிகர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இன்னும் லண்டனில் வசிக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பிதழை வழங்கியது யார் என்பது குறித்து முன்னாள் உயர் ஸ்தானிகரிடம் சிஐடி அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அது அதிகார பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதா? உயர் ஸ்தானிகராலயம் ராஜதந்திர வழிகளை முறையாகப் பயன்படுத்தியதா? அழைப்பின் நம்பகத்தன்மையை உயர் ஸ்தானிகராலயம் விசாரித்ததா? முன்னாள் ஜனாதிபதியின் வருகை ஒரு உத்தியோகபூர்வ வருகையாக மாறுவேடமிட்டு நடத்தப்பட்ட தனிப்பட்ட விஜயமா? இங்கிலாந்தில் தரையிறங்கியதிலிருந்து அவர் புறப்படும் வரை உயர் ஸ்தானிகராலயம் ஜனாதிபதிக்கு என்ன சேவைகளை வழங்கியது? என்றவாறாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இலங்கைக்குத் திரும்பாமல்
முன்னாள் உயர் ஸ்தானிகரைத் தவிர, முந்தைய வாரம் உயர் ஸ்தானிகராலய அலுவலகத்திற்குச் சென்ற சிஐடி அதிகாரிகள், அப்போதைய முன்னாள் துணை உயர் ஸ்தானிகர் மனோரி மல்லிகாரச்சி மற்றும் பயணத்தில் பணியாற்றிய பிற அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

மனோரி மல்லிகாரச்சி இன்னும் துணை உயர் ஸ்தானிகராக உள்ளார்.
உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றி, இலங்கைக்குத் திரும்பாமல் தங்கள் சேவையை முடித்துக்கொண்டு இங்கிலாந்திலேயே தங்கியிருந்த இரண்டு அதிகாரிகளும் உயர் ஸ்தானிகராலயத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அவர்கள் அருணா பெர்னாண்டோ மற்றும் கிருஷாந்த சுபாசிங்க ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

