கொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டத்தை வெற்றி கொள்வதற்காக ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பிரியாணி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபர் ரஹ்மான் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் கூட்டு எதிர்க்கட்சியினரது வசம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பிரியாணியை வழங்கி மாநகர சபையொன்றை ஆட்சி செய்ய முடியாது என்பது நிரூபணமாகி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ரகசிய வாக்கெடுப்பு நடத்தி தேசிய மக்கள் சக்தி செய்த நாடகமும் ஆறு மாதங்களில் முடிந்து விட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபையின் முதல் வரவு செலவுத் திட்டத்தை கூட்டு எதிர்க்கட்சியினர் தோற்கடித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மேயர் தெரிவின் போது பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்ததாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
தற்பொழுது இந்த வரவு செலவு திட்ட தோல்வியின் ஊடாக அரசாங்கம் பாடம் ஒன்றை கற்றுக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்தி மோசடியான முறையில் மாநகர சபை மேயர் பதவியை ஆளுங்கட்சி அபகரித்துக் கொண்டது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மோசடியான முறையில் மேயர் பதவியை அபகரித்த ஆளும் கட்சிக்கு ஜனநாயக ரீதியாக குறுகிய காலத்தில் எம்மால் பதிலளிக்க முடிந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆறு மாத காலத்தில் ஜனாதிபதிக்கும் ஆளும் கட்சிக்கும் வலுவான செய்தி ஒன்றை சொல்ல முடிந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இரவில் பிரியாணி வழங்கி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என ஆளும் கட்சி கருதுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அரசியலை இல்லாது ஒழிப்பதாக கூறி ஆட்சி பீடம் ஏறிய தேசிய மக்கள் சக்தி அதே வழியை பின்பற்றி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

