பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு பின்னர் அவர்களை கைவிட்டு செல்லும் பிள்ளைகளிடமிருந்து அந்தச் சொத்துக்களை மீளக் கைப்பற்றும் வகையில் புதிய ஒழுங்குவிதிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதன்படி, பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோர்களை அரசு பொறுப்பேற்று பராமரிக்கும் நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பெற்றோரின் சொத்துக்களை அனுபவித்துக்கொண்டு அவர்களை கைவிடுவது மிகவும் கொடூரமான செயல் என்றும், அது பெற்றோரின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதனால், பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோரின் சொத்துக்கள் தொடர்பில் புதிய சட்ட மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில், பிள்ளைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களை மீள அரசுடைமையாக்குவது உள்ளிட்ட யோசனைகள் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறினார்.
மேலும், பிள்ளைகளால் பராமரிக்கப்படாமல் தவிக்கும் அல்லது பல்வேறு தொந்தரவுகளை எதிர்நோக்கும் பெற்றோர்கள் உடனடியாக தகவல்களை வழங்கக்கூடிய வகையில் விசேட முறைமைகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
பெற்றோரின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

