திருகோணமலை மாவட்டத்தின் பிரதான நீர்ப்பாசன மூலாதாரமான கந்தளாய் குளத்தின் நீரை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இம்முறை சிறுபோக நெற்செய்கையின் அறுவடைப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.
சுமார் 22,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களின் அறுவடை தற்போது வேகமடைந்துள்ள நிலையில், விவசாயிகள் முழு வீச்சில் அறுவடைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கந்தளாய் குளத்தின் கீழ் நீர்ப்பாசனம் பெறும் பரட்டைக்காடு, செட்டிக்காடு, வான் எல, வட்டுகச்சி, நாலாம் வாய்க்கால் மற்றும் தம்பலகாமம் உள்ளிட்ட பகுதிகளில் நவீன அறுவடை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு நெல் அறுவடை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இம்முறை சிறுபோகச் செய்கையில் எதிர்பார்த்ததை விட சிறந்த விளைச்சல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, நெல்லுக்கான நியாயமான உத்தரவாத விலையை அரசாங்கம் நிர்ணயித்து வழங்கியிருப்பது தங்களுக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
சந்தையில் நிலவும் விலையை விட, தங்களது கடின உழைப்பிற்கு ஏற்ற வகையில் அரசாங்கம் உத்தரவாத விலையை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நல்ல விளைச்சலுடன், உரிய விலையும் உறுதி செய்யப்பட்டுள்ளதால், கந்தளாய் குளத்தை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Source: https://samugammedia.com/harvesting-of-22000-acres-farmers-happy-in-kandhalai-1784973623

